Monday, October 11, 2010

மனித இனத்தை மெல்ல அழிக்கும் மொபைல் போன்கள் !!!


நம் தினசரி வாழ்க்கை முறைகளில் அறிவியலின் ஆதிக்கத்தால் கடந்த நூறு ஆண்டுகளில் மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை கணக்கிட்டால் இன்றைய அறிவியலின் வளர்ச்சியால் நமது இயற்கையான ஆயுட் காலத்திலிருந்து அறுபது விழுக்காடு இந்த உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்டுள்ள செயற்கையான கண்டுபிடிப்புகள் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. இப்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு உலகத்தில் அங்கீகரிக்கப்பட்டு மற்றும் அங்கீகரிக்கப்படாத நிலையில் மொத்தம் ஆயிரத்திற்க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. இது அனைத்திலும் நமக்கு பயன் தரும் விடயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளால் பாதிப்புகள் என்ன ? அதைப் பற்றி எந்த சிந்தனையும் இன்றியே இன்றைய அறிவியல் வளர்ச்சி தினந்தோறும் வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது. பிரச்சனைகள் எப்பொழுது வருகிறதோ அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மட்டுமே அனைவரின் மனதிலும் குடியேறியுள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒரு உண்மை.

அதன் அடிப்படையில் பார்க்கத் தொடங்கினால் இப்பொழுது உலகத்தில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியால் பிரசவிக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரானிக் சாதனம் மொபைல் என்றுதான் சொல்லவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு மொபைல் போன்கள் முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே
செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.


இன்றைய நிலையில் நமது பார்வையை சற்று மொத்த உலகத்தை நீக்கி விரித்தால் நமது கண்களில் அதிகம் காட்சிதரும் ஒரே விசயம் இந்த மொபைல் போன்கள் என்று தெரியவரும் . அந்த அளவிற்கு உலகத்தில் இன்று அதிகமாக பயன்படுத்தப்படும் எலெக்ட்டிரிக் சாதனங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது இந்த மொபைல்போன்கள். ஒருவேளை இன்று இந்த மொபைல் போன்களின் சேவை நிறுத்தப்பட்டால் உலகத்தில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் இருந்து நான்கில் ஒரு பங்கு மக்கள் தற்கொலை செய்துகொள்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் ஆதிக்கம் எந்த அளவிற்கு மக்களுடன் ஒன்றிப்போய்விட்டதென்று.

இப்பொழுதுக்கூட சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆய்வின் அறிக்கை அறிய வந்தது. செல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (EWG) சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா,பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


ஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific A bsorption Rate எனப்படும் S A Rஅலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ்,ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.


இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.


அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.


சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.


இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.

செல்லும்போது வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.



அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு,மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும்,குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல்40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

 அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார். இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.


செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 2010 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் டாய்லெட்டுகளை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மொத்தம் 54.5 கோடி மில்லியன் செல்போன்கள் இயங்கிவருகின்றன. வரும் 2015ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 100கோடியை தொடும் என கணிக்கப்படுகிறது.ஆனால், இந்தியாவில் சுகாதாரமானகழிப்பிடங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 36,6 கோடி மட்டுமே என ஐநா சுற்றுச்சூழல் பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த10 ஆண்டு காலத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு78,000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர். கடந்த 2000ம் ஆண்டில் செல்போன் வைத்திருப்பவர்கள் நூற்றுக்கு 0.35 என்ற விகிதத்தில் இருந்தனர். ஆனால் தற்போது இந்த விகிதம் 100க்கு 45 என்ற அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. சர்வதேச அளவில் சுற்றுப்புற சுகாதாரத்தில், நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை வரும் 2025ம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என ஐ.நா கூறி வருகிறது.

மொபைல் போன்கள் தங்களது செய்திகளை நினைத்த நேரத்தில் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு அரிய கண்டுப்பிடிப்பு என்பது மறைந்து இன்று தங்களது பணத்தின் அளவையும் வசதியையும், சுற்றி இருக்கும் மக்களுக்கு அறிவிக்கும் ஒரு காட்சிப் பொருளாக மாறிப்போய்விட்டது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். நாம் சந்திக்கும் எவரிடமெனும் மொபைல் போன்கள் இல்லை என்றால் அவர்களை ஏளனமாக பார்க்கும் ஒரு கொடிய எண்ணம் இன்று பலரின் மனதில் குடியேறத் தொடங்கிவிட்டது. இந்த பதிவின் வாயிலாக யாரும் மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இல்லை என் நோக்கம். நமது தினசரி வாழ்வில் நாள் ஒன்றிற்கு நம்முடன் அதிகமாக உறவாடும் ஒரு சாதனம் மொபைல் போன் என்று ஆகிவிட்டது . அப்படிப்பட்ட இந்த அறிவியலின் அறிய கண்டுபிடிப்பால் நமக்கு மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகளை அறியாத பலருக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்.

 தினம் தினம் ஒரு புதிய மாடல் வந்துகொண்டிருக்கிறது மொபைல் போன்களில் இது போன்று கவர்ச்சிகரமான பல மாடல்களையும் அதனால் ஏற்படும் ஒரு சில பயன்பாடுகளையும் மட்டுமே மக்களின் மத்தியில் விளம்பரம் செய்து அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பூசி மறைத்து விடுகிறது பல வளர்ந்த நிறுவனங்கள். அதையும் நம்மைப் போன்றோர் மிகப்பெரிய சாதனைகளாக எண்ணி கை தட்டிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் நின்று விடவில்லை இந்த மொபைல் போன்களால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆபத்துக்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது என்பது இது வரை வெளியாகியுள்ள ஆய்வுகளின் அறிக்கை என்பது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு அதிர்ச்சி தரும் ஒன்றாகிப்போனது.


ஆபத்து என்று தெரிந்தும் அதைத்தான் பயன்படுத்துவோம் என்று இன்னும் அறியாமையில் மூழ்கிப்போய் தங்களுக்குத் தாங்களே ஆபத்துக்களை ஏற்படுத்தி கொள்ளும் அவல நிலையில்தான் இன்றைய அறிவியல் வளர்ச்சியின் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .

எப்பொழுதாவது யோசித்ததுண்டா நாம்? தினமும் வியர்வை சிந்தி நிலத்தில் பாடுபடும் விவசாயி தொண்ணூறு வயது வரை எந்த நோய்களும் இன்றி மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். ஆனால் அலுவலகத்தில் ஏசியில் வேலைபார்க்கும் யாரும் இப்பொழுதெல்லாம் ஐம்பது வயதைத்தாண்டி வாழ்வதே அதிசயமாக இருக்கிறது. காரணம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் பல விலை உயர்ந்த சாதனங்கள்தான் அனைத்திற்கும் காரணம். சில தினங்களுக்கு முன்பு கூட ஜப்பான் உயிரியியல் பூங்காவில் உள்ள, இரண்டு இந்திய யானைகள் மொபைல்போனில் பாகன்கள் கட்டளை படி நடந்துகொள்ளும் அதிசய சம்பவம் நடந்து வருவதாக ஒரு செய்தி அறிந்தேன். மனித இனத்தையும் தாண்டி விலங்குகளையும் இயக்கும் வகையில் இந்த மொபைல் போன்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இன்னும் காலப்போக்கில் மனித இனத்தின் அழிவிற்கு இந்த மொபைல் போன்களே ஒரு மிகப்பெரிய அணுகுண்டை போன்ற ஒரு ஆயுதமாகவும் மாறிப்போகலாம் என்றால் அது மிகையாகது.






No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator