Sunday, July 31, 2016

கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்........?


கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்........? 

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.
மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.
கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.
* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.
         ************* ************** *****************  ****************  ****************


வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் சுமார் 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதில் ஏப்ரல் 17-ஆம் தேதி நிலவரப்படி 12.40 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
3 நாள்களில் மானியம்: வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்தவுடன், அவர்களது வங்கிக் கணக்கில் முன்வைப்புத் தொகையாக ரூ.568 செலுத்தப்படுகிறது.
அதன் பின்னர் அந்தந்த மாதங்களுக்கான மானியத் தொகை, வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து எரிவாயு உருளைகளைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து 3 வங்கி வேலை நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத்தொகை செலுத்தப்பட்ட பின்னரும் அதற்கான தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படுவதில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால் இணையதள வங்கிச் சேவை வசதி உள்ளவர்கள் அதன் மூலமாகவும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்றும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோதான் அறிய முடிந்தது.
எஸ்.எம்.எஸ். வசதி: இதனைப் போக்கும் வகையில், இணையதளத்தைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களும், எளிய முறையில் நேரடி மானியத் திட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள், சமையல் எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
இதன்படி, "இண்டேன்' வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 81307 92899 என்ற எண்ணுக்கும், "பாரத் கேஸ்' வாடிக்கையாளர்கள் 77382 99899 என்ற எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
பின்னர் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Govindakudi Mosque

zakat calculator